25 October 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு மதுரை தமிழன்



உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்


திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

 

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNNஇணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல்பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள்அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டுமணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையைவிட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை


அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.


தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்னசெய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைதேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல், தேர்தல், கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒருகோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டுவேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இதுபோன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 .


இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றிநூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது போன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர்குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க.நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதைகேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரதுசேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர்முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்தகணமும் கூட. 


நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரிகொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடைசெய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்குகூட பொருந்த மாட்டார்கள்.


இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம்செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும்,  இவருடன் ஒரு நாள் இருந்து சிறுஉதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றிஎழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமைகொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவர்.


இப்பொழுது என்னுடைய ஹீரோவும் இவரே....

மேலே எழுதியது அனைத்தும் வேறு ஒரு ரசிகர் எழுதியது. அதை எனக்கு காப்பி செய்து என் மின் அஞ்சல் முகவரிக்கு வந்தது. அதையே இங்கு பேஸ்ட் செய்துள்ளேன். எனது ஹீரோவின் புகழ் என் மூலமாக சிலருக்கு பரவட்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பதிவு....


இவருக்கு வாக்களிக்க இங்கு கிளிக்கவும் அல்லது இந்த முகவரிக்கு செல்லவும் http://heroes.cnn.com/vote.aspx

இவரைபற்றிய மற்றொரு பதிவு இங்கு

இவரை பற்றிய தினமலர் செய்தி இங்கு

4 comments:

  • Anonymous says:
    26 October 2010 at 12:06 pm

    தமிழன் சாதித்தான் ...இவருக்கு நமது அரசு எதுவும் செய்யாது ஏனென்றால் அவரால் ஒரு பலனும் இல்லை..இந்த அரசியல் வாதிகளுக்கு

  • பெருங்காயம் says:
    28 October 2010 at 8:34 pm

    நல்ல விசயத்துடன் மீண்டும் வந்துள்ளீர்கள்.

  • vaasu says:
    10 December 2010 at 4:27 pm

    அது என்ன மதுரை தமிழன்? தமிழன்னு மட்டும் சொல்ல கூடாதா?. இது கூட‌ ஜாதி, மதம் போல ஒரு அடையாளம்னு தோனுது வேறு ஊர்காரர்களுக்கு.

  • மாணவன் says:
    8 February 2011 at 12:20 pm

    வணக்கம் நண்பரே உங்கள வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...

    <a href="http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_08.html>வலைச்சரம்</a>